Monday, August 5, 2013

சில்வியா கொண்டாடும் ஆனந்தனைக் காணவில்லை



ஏதாவதொரு மலைப் பிரதேசத்தில்தான்
ஆனந்தன் இன்னும் உயிரோடு இருந்துகொண்டிருப்பதாக
தீர்க்கமாக நம்புகிறாள் சில்வியா

மழை பிசிரடித்த ஒரு அதிகாலையில்
அவனது செருப்புச்சப்தம் கேட்டதாக
கனவிலிருந்து உடனடியாக ஜன்னலைத்
திறந்துப் பார்க்கிறாள்
சில்வியா

தொட்டிச்செடியில் நீர்த்தடமே இல்லாமலிருந்தது.

ஆனந்தனுக்கு மிகப்பிடித்த எலுமிச்சைத்தேநீரை
நாக்குகள் கலவும் தேர்ந்த முத்தமென
ஜன்னலருகே நின்று பருகத்துவங்குகிறாள்
மெல்ல எழும்பும் சூரியனைச் சபித்தபடி...

நடந்தவைகளெல்லாம்
புற்றுநோய்காரனின் ரத்தமென
காணக்கிடைக்கிறது
ஆனந்தன் விட்டுப்போன
நீலநிற அரைக்கைச் சட்டையில்


No comments: