Thursday, July 30, 2009

"விண் தொட்ட விரல்கள்"


உன் பாதங்களை
தரிசிக்கும் வீதிகளில்
காத்திருக்கிறேன்
வானளவு காதலுடன்!

கடந்து செல்கிறாய்
ஒவ்வொரு நாளும்
அழகு கூடியவாறே!

பேசாத மௌனமும்
சொல்லாத காதலுமாய்
ஓர் முட்டுசந்து மறைவில்
தவமிருக்கிறேன் நானும்!

ஒவ்வொரு இரவும்
கழுத்து நெரிக்கிறது- காதல்
நாளைய பொழுதினில்
உன்னோடு ஒட்டிக்கொள்ள!

வெட்கி சிரிக்கிறது
கனவுகள் கண்களிடம்
இன்றைய காலையின்
வியர்வை பொழுதினை எண்ணி!

உன் உதட்டுபுன்னகை
கண்டபின்னால்
சிதறிகிடக்கும் வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாக!

கோபம் சாமிக்கு
தெரிந்துவிட்டதுபோலும்
நான் கோவில்வருவது
உன்னை தரிசிக்கவென்று!

சில நாட்களில்
அக்காவின் அர்த்தமற்ற கோபங்கள்
நீ வெட்கி வெட்கி
விளக்கியபின் அர்த்தமுள்ளதாக!

ஒரு மொட்டைமாடி இரவில்
நீ நட்சத்திரங்களை
எண்ண சொன்னபின்
நம் காதலின் அளவறிந்துகொண்டேன்!

அதே இரவினில்
உனக்களித்த முத்தங்கள்
பெண்மையின் வெட்கம்
முழுமையாக தெரியபெற்றேன்!

நான் வாசிக்க
நீ ரசிக்க
மழலை நம்மை கட்டியணைக்க....

"அம்மா அதட்டுகிறாள்
டேய் தூங்குடா"!!!

No comments: