Thursday, July 30, 2009

பொய்கால்குதிரை..

பூக்களெல்லாம் அணிவகுத்து
ஆர்பாட்டம் செய்கின்றன
உந்தன் பிறந்தநாளை
பூக்களின் தினமாக்க சொல்லி !!

தங்கை பூட்டி வைத்திருக்கும்
வளையல்கள் அனைத்தும்
இரவுநேரங்களில் திருட்டுத்தனமாக
என்னிடம் வருகின்றன
கால்கள் வரைந்துவிடெனசொல்லி
உந்தன் கைகள்சேர
கொள்ளை ஆசையாம் அவைகளுக்கு !!

செட்டியார்கடை கொலுசுகளெல்லாம்
எந்தன் கைப்பிடித்து விடமறுக்கின்றன
உன்னை கடைவீதியில் கண்டபின்னால் !!

எப்படி தெரிந்து கொண்டதோ
இந்த கோவில் சிற்பங்கள்
நீ போகும் முன்னே
மெதுமெதுவாய் வெளிநடப்பு
செய்ய துவங்கிவிட்டன
ஓ.... நீ நடக்கிறாயோ !!

இப்பொழுதெல்லாம்
நிலா இரவையோ
நீண்ட ரயில்தடங்களையோ
எதிர்வீட்டு மழலையோ
என் முதல்காதலையோ
யோசிப்பதே இல்லை
என் கவிதைபொய்கள் !!

கடைசியில் ஒருநாள்
என் கனவுகளுக்கு
கால்கள் முளைத்து
உன் வாசல் வரும் !!

அன்றும் சொல்லி அணைக்காதே
நீ என் தோழனடா!!

No comments: